பெயர்:
அஞ்சல்:
கைது செய்யப்பட்ட 3 வைத்தியர்களும் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்
Thursday, 25 June 2009 12:13

அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட 3 வைத்தியர்களும் தொடர்ந்தும் எவ்வித சட்ட முன்னெடுப்புகளும் இல்லாமல் 40 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தமிழர் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மீண்டும் இரண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பணியாளர்களையும் கைது செய்து தடுத்து வைத்துள்ளதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்த காலத்தில் மோதல் தவிர்ப்பு பிரதேசமாக காணப்பட்ட பகுதியில், பாதிக்கப்பட்ட பொது மக்களுக்காக பணியாற்றிய இந்த வைத்தியர்கள் மூவரையும் ஐக்கிய நாடுகள் சபை கௌரவிக்கப்பட்டிருந்தது.

எனவே எவ்வித முன்னெடுப்புகளும் இல்லாது தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்களை விடுவிக்குமாறு கோரி, நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சர் முரேய் மெக்குலியிடம், அந்த அமைப்பு கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளது.

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துமாறு நியுசிலாந்து வெளிவிவகார அமைச்சரிடம் அந்த கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வவுனியா முகாமில் பணியாற்றி வந்த 2 ஐக்கிய நாடுகளின் ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கைது செய்யப்பட்டு, வவுனியா குருமன்காட்டில் உள்ள இராணுவ புலனாய்வு பிரிவினரால் விசாரணை என்ற பெயரில் கொடுமைப்படுத்தி வருவதாக அந்த அமைப்பின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.