பெயர்:
அஞ்சல்:
மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொருட்கள் பாவனைக்கு உதவாதவை என முறைப்பாடு
Tuesday, 23 June 2009 00:28

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி - பதுளை வீதியிலுள்ள புல்லுமலையில் அண்மையில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவு நிவாரணப் பொருட்கள் பாவனைக்கு உதவாதவை என அக்குடும்பங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் புகார் செய்துள்ளன.

இக்கிராமத்தில் கடந்த வாரம் 78 குடும்பங்கள் மீள் குடியேற்றப்பட்டன. இக்கிராமத்தினதும் மக்களினதும் தேவைகளை நேரில் அறிந்து கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளர் பூ.பிரசாந்தன், அனர்த்த முகாமைத்துவ அமைப்பு மற்றும், சி.டி.எம்.சி. நிறுவனப் பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் அண்மையில் அங்கு சென்றிருந்த போதே இந்த புகாரை முதலமைச்சரிடம் தெரிவிக்குமாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீளக்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட அரிசி, பருப்பு, சோயாமீற், மிளகாய்த்தூள் உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் அனைத்தும் பாவனைக்கு உதவாத நிலையில் இருந்தன எனக்கூறி அவற்றின் மாதிரிகளைச் சமர்ப்பித்து, முதலமைச்சரின் இணைப்பாளரிடம் அக்குடும்பங்கள் முறைப்பாடு செய்தன.

இந்த விடயம் உடனடியாக மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து புதிதாக உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

அதேவேளை உணவு, உடுதுணிகள் மற்றும் குழந்தைகளுக்கான பாவனைப் பொருட்கள் உட்பட பல்வேறு நிவாரணப் பொருட்களும் இக் குடும்பங்களுக்கு அன்றைய தினம் வழங்கப்பட்டன.