|
Monday, 22 June 2009 21:13 |
|

தடுப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களில் பொக்குளிப்பான் மற்றும் மஞ்சள்காமாலை ஆகிய தொற்று நோய்கள் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த முகாம்களில் 12 ஆயிரத்து 195 பேருக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டிருப்பதாகவும், 2139 பேருக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட 40 தொடக்கம் 50 வரையிலான நோயாளர்கள் நாளாந்தம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதேபோன்று மஞ்சள்காமாலை நோய் தொற்றிய பலர் நாளாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இருந்த போதிலும் இந்த நோய்கள் பரவுவது குறைந்து வருவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான இணைப்பு அலுவலகம் மஞ்சள் காமாலை நோயினால் உயிரிழந்துள்ளவர்களின் விபரம் பற்றிய தகவல்கள் எதனையும் குறிப்பிடவில்லை.
தடுப்பு முகாம்களில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடி, போதிய நீர்வசதி, மலசலகூட வசதிகள், நோய்த்தொற்றினைத் தடுப்பதற்குரிய போதிய தடுப்பு நடவடிக்கைகள் இன்மை, பெருகியுள்ள இலையான்களை அழிப்பதற்குரிய உறுதியான நடவடிக்கையின்மை போன்ற காரணங்களினாலேயே இந்த தொற்று நோய்கள் தடுப்பு முகாம்களில் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய்த்தொற்றினைத் தடுப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், முகாம்களின் சுகாதார நிலைமைகளையும் நீர்விநியோக நடவடிக்கைகளையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
|